×

கரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் பரிதாப பலி

*தந்தை, மகன்கள் படுகாயம்

க.பரமத்தி : கரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். தந்தை, மகன்கள் படுகாயமடைந்தனர்.கரூர் மாவட்டம் ஆட்டையாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (58). இவரது மனைவி மணிமேகலை (55). இவர்களது மகன்கள் சிவா (26), கார்த்திகேயன் (19). இந்நிலையில் நேற்றுமுன்தினம் பழனிசாமி தனது குடும்பத்துடன், உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக காரில் கரூர் சென்றார்.

காரை சிவா ஓட்டினார். பின்னர் இரவு காரில் ஊர் திரும்பினர்.அப்போது காருடையாம்பாளையம் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மணிமேகலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த க.பரமத்தி காவல் நிலைய எஸ்ஐ சித்ராதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான மணிமேகலை உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்த தந்தை, 2 மகன்கள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Karur ,Padukayam K. ,Paramathi ,Palanichami ,Attayambarappu ,Karur district ,Manimekalai ,Siva ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...