×

18 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை மேலும் ஒரு மீனவருக்கு சிறை: ஒரே வாரத்தில் 4 பேருக்கு சிறை; 3 படகுகள் அரசுடைமை; பெரிய அளவில் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8ம் தேதி பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறை பிடித்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த நாட்டு நீதிமன்ற உத்தரவுப்படி 19 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டனர். அனைவரும் நேற்று இலங்கை போலீசாரால் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
19 மீனவர்களையும் விசாரணை செய்த நீதிபதி, 18 பேரை விடுதலை செய்தார். படகோட்டிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தும், பறிமுதல் செய்த படகை அரசுடைமையாக்கியும் உத்தரவிட்டார்.

ஏற்கனவே கடந்த 4ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற 23 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அளித்த உத்தரவாதத்தின் பேரில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சூழலில் ஒரே வாரத்தில் 4வது மீனவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, பல லட்சம் மதிப்புள்ள 3 படகுகளும் அரசுடைமையாக்கிய சம்பவம், மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் உரிய பேச்சு வார்த்தை நடத்தி, தொடர் சிறைப்பிடிப்பு, சிறை தண்டனை நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படுமென மீனவர்கள் தெரிவித்தனர்.

* நாளை உண்ணாவிரதம்
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று மாலை அனைத்து விசைப்படகு மீனவர்களின் ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் ஜேசு தலைமையில் நடந்தது. கூட்டத்தின் முடிவில், இலங்கை அரசு விதித்துள்ள புதிய கடும் தண்டனை சட்டத்தை நிறுத்த வேண்டும். சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட விசைப்படகுகளை ஒன்றிய அரசு மீட்டு தரவேண்டும். நாளை (பிப்.24) தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post 18 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை மேலும் ஒரு மீனவருக்கு சிறை: ஒரே வாரத்தில் 4 பேருக்கு சிறை; 3 படகுகள் அரசுடைமை; பெரிய அளவில் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan Navy ,Bagjalasandi sea ,Jaffna ,Dinakaran ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை