×

புராதன ஆணைய சட்டத்தை 2 மாதங்களில் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு புராதன ஆணைய சட்டம் அமலுக்கு வருவது குறித்த அறிவிப்பை 2 மாதத்தில் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் 2012ம் ஆண்டு தமிழ்நாடு புராதன ஆணைய சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இந்த சட்டத்தின்கீழ் புராதன ஆணையத்தை அமைக்க உத்தரவிடக் கோரி இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கப்புர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் 2012ல் சட்டம் இயற்றப்பட்ட போதும், இதுவரை ஆணையத்தை அமைக்கவில்லை என்று வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சட்டத்தின் கீழ் விதிகளை வகுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விதிகள் வகுத்த பிறகு சட்டம் அமல்படுத்தப்படும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டம் இயற்றி 12 ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருப்பதால் சட்டத்தை இயற்றியதற்கான நோக்கமே வீணாகிவிடும். சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த சட்டம் அமலுக்கு வருவது குறித்த அறிவிப்பை 2 மாதத்தில் அரசு வெளியிட வேண்டும். விதிகளை வகுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 26ம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post புராதன ஆணைய சட்டத்தை 2 மாதங்களில் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Court ,Tamil Nadu Govt. ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...