×

காவல் துறை சார்பில் ரூ.23.53 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள் உள்ளிட்டவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவல் துறை சார்பில் ரூ.23.53 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள், நான்கு காவல் நிலையங்கள் மற்றும் ஒரு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் நிலையம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2024) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 23 கோடியே 53 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள், நான்கு காவல் நிலையங்கள் மற்றும் சென்னை, அசோக் நகரில் சிலை கடத்தல் பிரிவு காவல் நிலையம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை, ரூ.438.05 கோடி செலவில் 2637 காவலர் குடியிருப்புகள், ரூ.36.64 கோடி செலவில் 36 காவல் நிலையக் கட்டடங்கள், ரூ.69.83 கோடி செலவில் 14 காவல்துறை இதரக் கட்டடங்கள், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் ஆகியவற்றை காவல்துறையினரின் மேம்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று, கோயம்புத்தூர் மாவட்டம் – வி.எச். ரோட்டில் 16 கோடியே 57 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம் – இரத்தினபுரியில் 2 கோடியே 21 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், சென்னை மாவட்டம் – நந்தம்பாக்கத்தில் 1 கோடியே 46 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், புதுக்கோட்டை மாவட்டம் – மழையூரில் 83 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், செங்கல்பட்டு மாவட்டம் – செங்கல்பட்டில் 1 கோடியே 18 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலையம் மற்றும் சென்னை மாவட்டம் – அசோக் நகரில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம் என மொத்தம் 6 கோடியே 95 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு காவல் நிலையங்கள் மற்றும் ஒரு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் நிலையம்; என மொத்தம், 23 கோடியே 53 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள், நான்கு காவல் நிலையங்கள் மற்றும் ஒரு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் நிலையம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா. விசுவநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

The post காவல் துறை சார்பில் ரூ.23.53 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள் உள்ளிட்டவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Police Department ,K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Tamil Nadu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...