காஞ்சிபுரம், பிப்.21: குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வளியங்கரணை ஊராட்சியில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய வளையங்கரனை ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் காஞ்சிபுரம் வந்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய வளியங்கரணை ஊராட்சி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறி எங்கள் மீது புகார் அளித்திருந்தார். ஆனால், அது முற்றிலும் தவறானது. நாங்கள் 24 மாதங்களில் 18 மாதங்கள் ஊராட்சி மன்ற தலைவர் நல்லது செய்வார் என்று அவருக்கு ஆதரவளித்தோம். அவர் எங்களுக்கு தெருவிளக்கு, குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகள் செய்வதில் சுணக்கம் காட்டி வருகிறார். ஊராட்சி தீர்மானங்கள் கையெழுத்திட்டோம்.
ஆனால், அவர் ஊராட்சி தீர்மானங்களை தன்னுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எங்கள் ஊராட்சியில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் அதிபருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆகவே, ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்வதில் தவறிய ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மீது புகார் கூறிய ஊராட்சி தலைவரிடம் உரிய விசாரணை நடத்தி, இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வளியங்கரணை ஊராட்சியில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஊராட்சி மன்ற தலைவர்: துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.