×

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

மதுராந்தகம், பிப்.21: மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். மதுராந்தகம் அருகே உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த, பறவைகள் சரணாலயத்திற்கு ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிவாள் மூக்கன், நத்தை குத்தி, தட்ட வாயன், கரண்டி வாயன், வர்ண நாரை, பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட 23 வகையான பறவைகள், இயற்கையான பருவகால சூழல், இரை, இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருகின்றன.

தற்போது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 30 ஆயிரம் பறவைகள் வருகை தந்துள்ளது. இந்நிலையில், இந்த பறவைகள் சரணாலயத்தினை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சரணாலயத்தின் பார்வையாளர்கள் நடைமேடை, ஏரிக்கான நீர்வரத்து, சரணாலய வளர்ச்சி, பறவைகள் காட்சி கூடத்தில் பறவைகளின் ஒளிரும் படங்களின் காட்சி கூடம் ஆகியவற்றை சீரமைத்தல் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து, சரணாலயத்திற்கு பார்வையிட வந்திருந்த மாணவ – மாணவிகளிடம், சரணாலயம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வேடந்தாங்கலை பற்றி கூறிய மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார். ஆய்வின்போது, ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vedantangal ,Bird Sanctuary ,Madhuranthakam ,Madhurandakam ,Chengalpattu District ,Collector ,Arunraj ,Maduraandakam ,Vedantangal Bird Sanctuary ,Madurandakam ,Australia ,Pakistan ,Burma ,Bangladesh ,Indonesia ,Madurathanga ,
× RELATED திடியூரில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்