×

ஸ்டெர்லைட் வழக்கு: நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற உச்சநீதிமன்ற யோசனை ஆபத்தானது: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் தவறானவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. இந்த யோசனை ஆபத்தானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பிப்.14 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் குறித்த வழக்கில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை. தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட்டை இயக்க அனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒத்துக்கொள்ளும் எனில் ஒரு நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. மாநில அரசின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கடும் எதிர்ப்பையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்த பிறகும், உச்சநீதிமன்றம் இப்படிப்பட்ட ஆலோசனையை முன்வைத்திருப்பது நியாயமற்றது.

ஸ்டெர்லைட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஓராண்டு காலம் நடத்திய போராட்டத்தின் உச்சகட்டத்தில், அமைதியாக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உச்சநீதிமன்றத்தின் கருத்து இவ்வுயிரிழப்புகளையும், படுகாயம் அடைந்த மக்களின் வலிகளையும், வேதனைகளையும் புறந்தள்ளுவதாகும்.

தேசத்தின் நலன், தாமிர உற்பத்தியின் தேவை ஆகியவை குறித்து உச்சநீதிமன்றத்தின் கவலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை எவ்வித சட்டதிட்டத்தையும் மதிப்பதில்லை என்பது வரலாறு. ஸ்டெர்லைட் ஆலை துவக்குவது சம்பந்தமான அறிவிப்பு வந்ததிலிருந்தே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், குறைந்தபட்சம் பசுமை வளையத்துக்கான மரங்களை நடுவதற்கு கூட கால் நூற்றாண்டுகளாக மறுத்தே வந்த நிறுவனம் அது.

15 உயிர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு அவ்வளவு பெரிய மக்கள் திரள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம், அந்த நிறுவனம் அரசு அமைப்புகளை தன்வயப்படுத்திக் கொண்டு அதன் காரணமாக தனது சட்டமீறல்களை தொடர்ந்ததே ஆகும். 2010 ஆம் ஆண்டு அந்த ஆலை மூடப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும், ஒருநாள் கூட உற்பத்தியை நிறுத்தாமல் உச்ச நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்ற பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மூர்க்கத்தனம் அதிகமானது. அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை இது மாவட்ட நிர்வாகத்தின் பிரமாணப் பத்திரமா? ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பிரமாணப் பத்திரமா? என்று கேட்கும் அளவுக்கு சென்றது.

குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும், உயர்நீதிமன்றம் மூட வேண்டுமென்று ஆணையிட்ட பிறகும், பொதுமக்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருந்தபோதும், ‘காப்பர் ஸ்லாக்’ எனப்படும் நச்சுக் கழிவுகளை எவ்வித தடையுமின்றி நீர்நிலைகளில் கொட்டி, நிலத்தையும் நீரையும் பாழாக்கிய அளவுக்கு சட்டத்தை மதிக்காதவர்கள்.

இது தவிர, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு நாட்டுக்கு இழப்பையும் ஏற்படுத்தியுள்ளனர். தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று ஆகியவற்றை தொடர்ச்சியாக மாசுப்படுத்தி வந்தபோதும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் எதையும் காது கொடுத்து கேட்காத நிறுவனம் ஸ்டெர்லைட். இந்தப் பின்னணியில், நிபுணர் குழுவின் அறிக்கையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் அடாவடித்தனத்தை மீண்டும் தொடங்குவார்கள். எனவே, உச்ச நீதிமன்றம் இந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென்றும், தமிழக அரசு இந்த ஆலோசனையை நிராகரிப்பதுடன் இதுவரையிலும் எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஸ்டெர்லைட் வழக்கு: நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற உச்சநீதிமன்ற யோசனை ஆபத்தானது: கே.பாலகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,K. Balakrishnan ,CHENNAI ,Marxist ,Communist ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...