×

சோழிங்கநல்லூர் சிக்னலில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் சிக்னலில் நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எளிதாக சாலையை கடந்து செல்ல போக்குவரத்து போலீசார் வழிவகை செய்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அதிகளவில் ஐடி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள் உள்ளன. இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மேலும், ராஜீவ்காந்தி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் சாலை ஆங்காங்கே குறுகலாகவும் உள்ளது.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருபுறமும் வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் அணிவகுத்து நிற்பது வழக்கமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி, அலுவலகம், மருத்துவமனைக்கு செல்லக்கூடியவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், சோழிங்கநல்லூர் சிக்னலை மூடிவிட்டு சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.

சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மேடவாக்கம் செல்ல இடதுபுறம் திரும்பி சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகம் அருகே 200 மீட்டர் தூரம் செல்லவும், வலது பக்கம் திரும்பி சோழிங்கநல்லூர் சிக்னல் வந்தடைந்து பின்னர் இடது பக்கமாக மேடவாக்கம் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கேளம்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் மேடவாக்கத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சிக்னலில் இடது பக்கம் திரும்பி துலுக்காணத்தம்மன் கோயில் சென்று, வலது பக்கம் திரும்பி சோழிங்கநல்லூர் சிக்னல் வந்தடைந்து, இடது பக்கமாக கலைஞர் கருணாநிதி சாலை வழியாக கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் காரணமாக, நேற்று காலை முதல் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்காமல் சோழிங்கநல்லூர் சிக்னலை சுலபமாக கடந்து செல்கின்றன. மேலும் பொதுமக்கள் சாலையை எளிதாக கடக்க செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சோழிங்கநல்லூர் சிக்னலில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Durai Pakkam ,Rajiv Gandhi Road ,Chennai ,
× RELATED பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம்...