×

வடபழனி வணிக வளாகத்தில கஞ்சா விற்ற சூபர்வைசர் கைது

சென்னை: வடபழனியில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஹவுஸ்கீப்பிங் சூபர்வைசர் ஒருவரை தி.நகர் துணை கமிஷனரின் தனிப்படையினர் கைது செய்தனர். சென்னை வடபழனியில் பிரபல தனியார் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இங்கு வரும் வாலிபர்களுக்கு சிலர் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்வதாக தி.நகர் துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி துணை கமிஷனரின் தனிப்படையினர் நேற்று முன்தினம் வணிக வளாகத்தில் சாதாரண உடையில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹவுஸ் கீப்பிங் சூபர்வைசர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்களிடம் பணம் வாங்கி கொண்டு, சிறு பொட்டலம் கொடுத்து வந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அதிரடியாக சூபர்வைசரை பிடித்து சோதனை செய்த போது, அவர் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், நெசப்பாக்கத்தை சேர்ந்த வேலு(22) என்றும், இவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்த வணிக வளாகத்தில் ஹவுஸ் கீப்பிங் சூபர்வைசராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படையினர் வேலுவை வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வேலு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, அவரிடமிருந்து 15 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

The post வடபழனி வணிக வளாகத்தில கஞ்சா விற்ற சூபர்வைசர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadapalani ,CHENNAI ,Vadapalani, Chennai ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் அளிக்கும் இந்த வரவேற்பு,...