×

விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய பந்த் போராட்டம்: டெல்லி எல்லையில் நீடிக்கும் பதற்றம்

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசை கண்டித்து விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது. பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை ஒன்றிய பாஜ அரசு நிறைவேற்றத் தவறியதை கண்டித்து, சம்யுக்தா கிசான் மோர்சா உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன.

இதைத் தொடர்ந்து, தடையை மீறி டெல்லி நோக்கி டிராக்டரில் புறப்பட்ட பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பஞ்சாப்-அரியானா மாநில எல்லையான ஷம்புவில் விவசாயிகள் மீது போலீசார் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், 3வது நாளாக நேற்றும் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர்ந்து முகாமிட்டனர்.

அங்கு பல சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் முகாமிட்டுள்ள பகுதிகளில் நேற்று எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. அதே சமயம் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல்வேறு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. பஞ்சாப், அரியானாவில் முக்கிய நகரங்களில் போராட்டம் மேலும் தீவிரமடைவதை தடுக்க இன்று வரை இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஒன்றிய அரசை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைந்து விவசாய சங்கங்கள் இன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த பந்த் போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர்கள் யாரும் வயலில் இறங்கி வேலை செய்யாமல் முழு ஒத்துழைப்பு தருமாறு விவசாய சங்க தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பந்த் போராட்டத்தை தொடர்ந்து நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பஞ்சாப்பின் சண்டிகரில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் நேற்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

The post விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய பந்த் போராட்டம்: டெல்லி எல்லையில் நீடிக்கும் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Nationwide bandh strike ,Delhi border ,New Delhi ,Union BJP government ,Punjab ,Aryana ,bandh ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு