×

காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முதுமலை – பந்திப்பூர் புலிகள் காப்பக சாலை ஓரத்தில் ‘கவுன்டர் பயர்’

*50 தீத்தடுப்பு காவலர்கள் மும்முரம்

ஊட்டி : காட்டு தீ ஏற்படுவதை தடுக்க முதுமலையில் இருந்து பந்திப்பூர் புலிகள் காப்பகம் செல்லும் சாலையோரங்களில் ‘கவுன்டர் பயர்’ முறையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வட கிழக்கு பருவமழையும் பெய்யும்.
இவ்விரு பருவமழையும் குறித்த சமயத்தில் பெய்தால், ஆண்டு முழுக்க அனைத்து நீரோடைகள், ஆறுகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இருக்கும்.

வனங்களும் பசுமையாக காட்சியளிக்கும். இம்முறை இவ்விரு பருவமழையும் எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. மேலும். உறைபனி மற்றும் வெயிலின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தற்போது வனங்கள் காய்ந்து போயுள்ளன. குறிப்பாக, மித வெப்ப பகுதியான முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் போன்ற பகுதிகளில் புற்கள், செடி, கொடிகள் காயத்து வங்கியுள்ளன.

இதனால், யானை, புலி, காட்டுமாடு போன்ற விலங்குகள் நீர் நிலைகளை தேடி செல்ல துவங்கியுள்ளன. தற்போது வனங்கள் காய்ந்துள்ளதால், காட்டு தீ ஏற்டும் அபாயம் நீடிக்கிறது. மேலும், முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாகவே ஊட்டி – மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்லும் நிலையில், ஏராளமான வாகனஙகள் இவ்வழித்தடம் வழியாக சென்று வருகின்றன.

சுற்றுலா பயணிகள் சிலர் சிகரெட் குடித்துவிட்டு சாலையோரங்களில் வீசுவதால் காட்டு தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், காட்டு தீ ஏற்படாமல் தடுக்க வனங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளிலும் தற்போது தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மற்றும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்துச் செல்லும், முதுமலை – பந்திப்பூர் இடையே மைசூர் சாலையின் இரு புறங்களிலும் தீ தடுப்பு கோடுகள் 30 மீட்டருக்கு அமைக்கப்பட்டு வருகிறது. கவுன்டர் பயர் முறையில் சாலையில் இருந்து 30 மீட்டர் தொலைவிற்கு உள்ள செடி, கொடிகள் மற்றும் புற்கள் ஆகியவை சேகரித்து தீ மூட்டப்பட்டு, பின் அவைகள் எரிந்து முடிந்தவுடன் தீ பராவாமல் இருக்க உடனடியாக அணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் 50க்கும் மேற்பட்ட தீ தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முதுமலை – பந்திப்பூர் புலிகள் காப்பக சாலை ஓரத்தில் ‘கவுன்டர் பயர்’ appeared first on Dinakaran.

Tags : Mudumalai - Bandipur Tiger Reserve ,Bandipur Tiger Reserve ,Mudumalai ,Dinakaran ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...