சென்னை: உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரலாக எதிரொலிப்போம், மொத்த இந்தியாவுக்கு் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள் வரும் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த பொதுக்கூட்டங்களை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: `உரிமைகளை மீட்க, தலைவரின் குரல்’ என்ற முழக்கத்தோடு நாம் தேர்தல் களத்தைக் காண இருக்கிறோம். ஐந்து வருடத்தில் மட்டும் நாம் ஆறரை லட்சம் கோடி ரூபாய் வரி கட்டியிருக்கிறோம். ஆனால், ஒன்றிய அரசு நம் தமிழ்நாட்டுக்குத் திருப்பிக் கொடுத்தது எவ்வளவு என்று பார்த்தால், வெறும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். இதை மக்களிடம் எடுத்து சென்று பேசுங்கள். இதை ஒரு பேசு பொருளாக்குங்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒரு ரூபாய் கொடுத்தால், நமக்கு திருப்பி ஒன்றிய அரசு டெல்லியில் இருந்து நமக்குக் கொடுப்பது வெறும் 29 பைசா. மக்களிடம் தொடர்ந்து இதைப் பேசிக் கொண்டே இருங்கள்.
எப்போதும் நடப்பதுபோல் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி ஆரம்பிப்போம், நிகழ்ச்சியை முடிக்கும்போது தேசிய கீதம் பாடுவதுதான் வழக்கம். அது ஆளுநருக்கும் தெரியும். இருந்தாலும், இதை ஒரு பிரச்சினையாக்கினார். இதற்காகத்தான் ஆளுநர் என்ற பதவியே தேவையில்லை என்று, இளைஞர் அணி மாநாட்டில் நாம் தீர்மானம் நிறைவேற்றினோம். இப்படி எல்லா பக்கமும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதையெல்லாம் மக்களிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
பத்தாண்டு காலம் பாஜக தமிழ்நாட்டைச் சீரழித்தது என்றால், நேரடியாக அவர்கள் வந்து செய்யவில்லை. அதிமுகவின் உதவியோடுதான் எல்லாவற்றையும் நமக்கு எதிராகச் செய்து முடித்தார்கள். இதையெல்லாம் நாம் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகளுக்கான மிகப்பெரிய, ஒரு பிரமாண்ட கூட்டம் தலைவரின் பிறந்த நாளான மார்ச் 1 அன்று நடைபெற இருக்கிறது. எனவே, இந்தக் கூட்டங்களையெல்லாம் மிகப்பெரிய வெற்றி அடையச் செய்ய வேண்டியது நம் கடமை. விடியலை நோக்கி தலைவரின் குரலாக நாம் 2021ல் தமிழ்நாடு எங்கும் எதிரொலித்தோம்.
தமிழ்நாட்டுக்குப் புதிய விடியல் கிடைத்தது. அதேபோல் இப்போது உரிமைகளை மீட்க தலைவரின் குரலாக எதிரொலிப்போம். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை. கலைஞர் நூற்றாண்டில் ‘பாசிசம் வீழ்ந்தது, இந்தியா வென்றது’ என்ற வரலாற்றைப் படைத்திடுவோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்றார். முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையுரை நிகழ்த்தினார். அமைச்சர் எ.வ.வேலு நன்றி கூறினார். பத்தாண்டு காலம் பாஜ தமிழ்நாட்டைச் சீரழித்தது என்றால், நேரடியாக அவர்கள் வந்து செய்யவில்லை. அதிமுகவின் உதவியோடுதான் எல்லாவற்றையும் நமக்கு எதிராகச் செய்து முடித்தார்கள்.
The post உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரலாக எதிரொலிப்போம் மொத்த இந்தியாவுக்கும் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை: திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.