×

திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க நிதி முறைகேடு; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 இன்ஸ்பெக்டர்கள் நேரில் ஆஜர்: மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018ம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. இதில் விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் 4 மாதத்திற்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணை முடிக்கவில்லை என்று கூறி ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பாண்டிபஜார் காவல் நிலையதிதில் 2022 மார்ச் முதல் 2023 செப்டம்பர் வரை பணியில் இருந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்களாக இருந்த 5 பேர் நேரில் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தாதது உண்மை தான். ஆனால் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்று கூறினார். இதனையடுத்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத 2 ஆய்வாளர்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததாக தெரிவித்தனர். அவர்களின் மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க நிதி முறைகேடு; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 இன்ஸ்பெக்டர்கள் நேரில் ஆஜர்: மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Film Cinematographers' Union ,Chennai ,South Indian Film Cinematographers Association ,Bandipazar ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...