×

தரமற்ற விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியம்

 

ஊட்டி, பிப். 12: விதை பரிசோதனை செய்து தரத்தை அறிந்து விதைப்பதன் மூலம் தரமற்ற விதையினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து கொள்ளலாம் என ஊட்டி விதை பரிசோதனை நிலையம் அறிவுறுத்தி உள்ளது. விதை பாிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் நவீன் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை விநியோகஸ்தர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதைகளை ஊட்டி ரோஜா பூங்கா அருகே தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விதை பரிசோதனை நிலையத்தில் பணிவிதை மாதிரியை கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இந்நிலையத்தில் விதையின் தர நிர்ணய காரணிகளான முளைப்பு திறன்,புறத்தூய்மை,ஈரப்பதம் போன்றவை பரிசோதனை செய்யப்படுகின்றன. ஒரு பணி விதை மாதிரிக்கு ரூ.80 மட்டுமே பரிசோதனை கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம்,குவியல் எண் ஆகியவை குறித்த விவர சீட்டுகளை கொடுத்து விதையில் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

விதை பரிசோதனைக்கு கேரட்,காலிபிளவர்,முட்டைகோஸ் பயிர்களுக்கு 10 கிராம், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி 50 கிராம், பீன்ஸ் 450 கிராம்,பட்டாணி 250 கிராம்,பாலக்கீரை 25 கிராம்,புரோக்கோலி, நூல்கோல் மற்றும் டர்னிப் 10 கிராம் என பணிவிதை மாதிரிகளை வழங்கலாம்.இவ்வாறு பயிருக்கேற்ப குறைந்தபட்ச பணிவிதை மாதிரியை விதை பரிசோதனை செய்து விதையின் தரத்தை அறிந்து விதைப்பதன் மூலம் தரமற்ற விதையினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து கொள்ளலாம்.

The post தரமற்ற விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Seed Testing Station ,Seed ,Station ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...