×

லோடு வேன் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் காயம்

 

திருச்சுழி, பிப்.11: திருச்சுழி அருகே லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சுழி அருகே சாமிநத்தம், பனையூர் பகுதியிருந்து 25க்கும் மேற்பட்டோர் லோடு வேனில் இலுப்பையூர், ம.ரெட்டியபட்டி வழியாக பெருநாழி பகுதிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை ரெங்கையன்பட்டி பகுதியை சேர்ந்த மலைச்சாமி (38) ஓட்டி வந்தார். அருப்புக்கோட்டை-சாயல்குடி சாலையில் பரளச்சி மின் வாரிய அலுவலகம் அருகே வந்த போது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தில் இருந்த நாகஜோதி(60), வையமுத்து(54), கள்ளியம்மாள்(65), பாப்பா(70), பெரியநாச்சி(30) உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாமிநத்தம் பகுதியை சேர்ந்த நாகஜோதி கொடுத்த புகாரின் பேரில் வேன் டிரைவர் மலைச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து பரளச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post லோடு வேன் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Saminattam, Panaiyur ,Perunazhi ,Ilupbaiyur, M. Reddiapatti ,
× RELATED திருச்சுழியில் 54 மிமீ மழை பதிவு