×

குமரி ஆசிரியை கணவர் கொலை; ஆபாசமாக திட்டியதால் கத்தியால் குத்தினேன்: கைதான ரவுடி வாக்குமூலம்

நாகர்கோவில், பிப்.11: நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் ஜோசப் நகர் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் (40). டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நிக்கோலஸ் டிக்கா மெர்சி (40). இவர் சடையமங்கலம் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். லாரன்சுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. கடந்த 8ம்தேதி நள்ளிரவில் லாரன்ஸ் தனது வீட்டு அருகில் அமர்ந்து நண்பர் கிறிஸ்டோ வினிசுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் கிறிஸ்டோ வினிஸ் ஆத்திரம் அடைந்து லாரன்சை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். படுகாயம் அடைந்த லாரன்ஸ், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்்.

தலைமறைவாக இருந்த கிறிஸ்டோ வினிசை நேற்று முன் தினம் மதியம் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான கிறிஸ்டோ வினிஸ், அளித்துள்ள வாக்குமூலத்தில், நானும், லாரன்சும் நண்பர்கள் ஆவோம். சம்பவத்தன்று இரவு நாங்கள் வழக்கம் போல் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினோம். அப்போது திடீரென லாரன்ஸ் என்னை அவதூறாக பேசினார். இதை நான் கண்டித்தேன். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. லாரன்ஸ் தான் என்னை முதலில் தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கத்தியால் குத்தி விட்டு தப்பினேன். அவர் இறந்தது எனக்கு தெரியாது.

போலீஸ் தேட வந்த போது தான் லாரன்ஸ் இறந்தது எனக்கு தெரியும் என கூறியதாக தெரிகிறது. கைதான கிறிஸ்டோ வினிஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீஸ் சரித்திர பதிவேடு பட்டியலிலும் உள்ளார். இவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். நாகர்கோவிலில் சமீப காலமாக குடிபோதையில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஒன்றரை மாதத்தில் இது 3 வது கொலை ஆகும்.

The post குமரி ஆசிரியை கணவர் கொலை; ஆபாசமாக திட்டியதால் கத்தியால் குத்தினேன்: கைதான ரவுடி வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Lawrence ,Asaripallam Joseph Nagar ,Nicholas Tikka Mercy ,Sadiyamangalam Government Primary School ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...