×

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்: முன்னாள் காங் எம்பி வலியுறுத்தல்


காஞ்சிபுரம்: நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் எம்பி விஸ்வநாதன் வலியுறுத்தினார். காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்பி பெ.விசுவநாதன் நேற்று காஞ்சிபுரத்தில் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டார். தற்போது, மணிப்பூரில் இருந்து மும்பை வரை 6,700 கிலோ மீட்டருக்கும் அதிகமான யாத்திரையை அவர் மேற்கொண்டு வருகிறார். ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 2மாதத்திற்கு முன்பே நான் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறேன்.

இந்தியாவில் 60% மக்கள் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று வலிமையாக குரல் கொடுத்து வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மையக்கரு யாரிடம் உள்ளது? சாப்ட்வேர் எங்குள்ளது, எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது? என்ற விபரங்களை கேட்டுள்ளேன். ஆனால், இதுவரை பாஜ அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. நமது 70 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்த வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். பாஜ நமது இந்தியாவையே சாபக்கேடாக மாற்றி இருக்கிறது. மல்லிகார்ஜூன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதில், என்னவென்றால் ரிசர்வ் வங்கி ₹1.75லட்சம் கோடி மூலதனத்தை தைரியமாக எடுத்துச் செலவு செய்திருக்கிறார்கள்.

அதேபோல, சுனாமி வந்த காலத்தில் ₹2 லட்சம் கோடி கொள்ளை அடித்திருக்கிறார்கள். பண மதிப்பு செய்து இந்தியாவை நாசம் செய்துள்ளனர். மேலும், விவசாயிகள் போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். மணிப்பூரில் 200 கிராமத்தில் இருந்து மக்களை வெளியேற்றியிருக்கிறார்கள். ஏராளமானோர் இறந்திருக்கிறார்கள். இதையெல்லாம் சரிசெய்யாமல் இந்துத்துவாவை மட்டுமே அடையாளமாக கொண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையில் கொடுமையான ஆட்சி செய்து வருகிறார்கள். தமிழகத்தில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. ஆகவே, இந்த கூட்டணிளை நாம் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்: முன்னாள் காங் எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Former ,Congress ,Viswanathan ,Constituency ,P. Viswanathan ,President ,Member of Parliament ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...