×

விடைத்தாள்களை தர மறுப்பதாக குற்றச்சாட்டு; சிவில் நீதிபதிகள் நேர்முக தேர்வுக்கு தடை கோரி வழக்கு.! டிஎன்பிஎஸ்சி, தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வானது நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த நவம்பர் மாதம் நடந்த பிரதான தேர்வின் முடிவுகள் கடந்த ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சியடைந்தவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரதான தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பிரதான தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுக்களில், சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் போட்டி தேர்வு விடைத்தாள்களை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குகின்றன. அரசு பணியாளர் தேர்வாணையம் மட்டும் விடைத்தாள்களை வழங்க மறுக்கிறது. எனவே, விடைத்தாள்களை வழங்க கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபிக் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கும் உத்தரவிட்டனர்.

The post விடைத்தாள்களை தர மறுப்பதாக குற்றச்சாட்டு; சிவில் நீதிபதிகள் நேர்முக தேர்வுக்கு தடை கோரி வழக்கு.! டிஎன்பிஎஸ்சி, தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Tamil Nadu Govt. ,iCourt ,Chennai ,High Court of Chennai ,Tamil Nadu Civil Servants Selection Commission ,Court ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...