×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடலோர கிராமங்களில் கருவாடு உலர்தளம் அமையுங்கள்

*சாலையோரம் அவதிப்படும் மீனவர்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள கடலோர கிராமங்களில் அவதிப்படும் மீனவர்களின் நலன் கருதி, கருவாடு உலர்தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்தில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் ஆர்.எஸ் மங்கலத்தை அடுத்த மோர்பண்னை ஒரு மீனவர் கிராமமாகும். இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள திருப்பாலைக்குடி தொண்டி, நம்புதாளை, சோளியக்குடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டினம், முனிவீரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நாட்டுப்படகுகளில் இரவில் சென்று மறுநாள் காலை அல்லது பகலில் சென்று இரவில் வீடு திருப்புகின்றனர்.

மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஐஸ் கட்டி பாக்ஸ்களை கொண்டு சென்று மீன் கெடாமல் பாதுகாத்து கொண்டு வருகின்றனர். இறால், நண்டு, கணவாய் மற்றும் பல்வேறு வகையான மீன்களை உள்ளூர் மற்றும் வெளியூர் மீன் கம்பெனிகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்களை ஏற்றுமதி நிறுவனத்தினர் நேரடியாகவும், சிறுகம்பெனிகள் மூலமாகவும் கொள்முதல் செய்கின்றனர். மற்ற மீன்களை ஆர்.எஸ்.மங்கலம்.

திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோவில், சிவகங்கை, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். விற்பனை செய்தது போக பாக்கியுள்ள மீன்களை, உப்பு கலந்து கருவாடாக உலர்த்தி பல்வேறு நகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இது மீனவர்களின் வழக்கமான தொழில்முறையாக உள்ளது.

இந்நிலையில், கடலோர கிராமங்களில் மீன்களை உலர்த்தும் உலர்தளம் இல்லாமல் சாலையோரங்களிலும் உலத்தும் நிலை தொடர்கிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த கருவாடுகளை வாங்கி சாப்பிடுபவர்களுக்கும் அது 100 சதவீதம் சுகாதாரமாக இருப்பதில்லை. மோர்பண்ணை கிராமத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கருவாடு உலர்த்துவதற்கு சரியான தளம் இல்லை. எனவே, கடலோர கிராமங்களில் மீன் உலர்தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘அரசு சார்பில் மோர்ப்பண்ணை கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைத்து கொடுத்துள்ளனர். இதில், மீனவர்கள் கடலில் பிடித்த மீன்களை கொண்டு வந்து இறக்குவது மற்றும் மீன் பிடிக்க பயன்படுத்தும் படகுகள் மற்றும் வலைகளை பழுது நீக்குதல், புதிய வலைகள் அமைத்தல், ஓய்வு எடுத்தல் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், மீன்களை உலர்த்த போதிய வசதிகளுடன் தளம் இதுவரை அமைக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு மோர்பண்ணை கிராமத்தில், அமைக்கப்பட்ட கருவாடு உலர்தளம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதனால் மீன்களை கருவாடாக உலர்த்துவதற்கு சரியான இடமில்லாமல், சாலையோரங்களிலும், நடைபாதையிலும் உலர்த்துகிறோம். திருப்பாலைக்குடியில் மீன் இறங்கு தளம் மற்றும் உலர்தளம் வசதி இல்லாமல் இருக்கிறது. சாலையோரங்கள் மீன்களை உலர்த்த சரியான இடம் அல்ல. ஏனெனில் இதுபோன்ற இடங்களில் அவை முழுமையாக உலர்ந்து கருவாடாக மாறாத. இதனால் அவற்றை கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், மீனவர்களின் உழைப்பு வீணாகிறது. எனவே, அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் இறங்கு தளம், மீன் உலர்தளம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அந்நியச் செலாவணி கிடைக்கிறது

மீனவர்கள் கடலில் பிடிக்கும் இறால், நண்டு மற்றும் பல்வேறு ரக மீன்கள் உள்நாடு மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், பர்மா, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணி அதிக அளவில் கிடைக்கிறது. எனவே இதற்கு காரணமாக இருக்கும் மீனவர்களின் தேவைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடலோர கிராமங்களில் கருவாடு உலர்தளம் அமையுங்கள் appeared first on Dinakaran.

Tags : Karuvadu ,RS Mangalam ,Ramanathapuram ,RS ,Garuvadu ,Mangalam ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு