திருவாடானை, பிப். 10: திருவாடானை அருகே நான்கு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புதிய வாக்காளர்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பது தொடர்பாக மாதிரி ஓட்டு பதிவை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாடானை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் நாகராஜன் தலைமையில், வருவாய் துறையினர் திருவாடானை அருகே கட்டிவயல், குருந்தங்குடி, நகரிக்கத்தான், ஊரணி கோட்டை ஆகிய கிராமங்களில் மின்னணு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்படி சிறப்பு வாகனங்களில் வாக்குப்பதிவு மையம் அமைத்து மாதிரி ஓட்டு பதிவை நடத்தினர். இந்த விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தனர். அப்போது, வாக்களிக்கும் முறை மற்றும் தங்கள் வாக்கு பதிவாகி உள்ளதா என்பதை அதற்கான திரையில் பார்த்து தெரிந்துகொள்வது உள்ளிட்ட தகவல்களை வருவாய்த்துறையினர் விளக்கி கூறினர்.
The post திருவாடானை அருகே மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.