×

₹90 லட்சம் மதிப்புள்ள கோயில் சொத்து மீட்பு

அம்பத்தூர், பிப். 10: அம்பத்தூர் அருகே பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ₹90 லட்சம் மதிப்புள்ள கோயில் சொத்து மீட்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை அடுத்த பாடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, கோயில் அருகே ஜெகதாம்பிகை நகர், திருவள்ளுவர் தெரு சர்வே எண். 303/4 – ல் 2025 சதுர அடி கொண்ட காலியிடம், வெகுநாட்களாக ஜெகதாம்பிகை நகர் குடியிருப்பு சங்கத்தின் மூலம் வாடகை ஏதும் செலுத்தாமல் அனுபவித்துக் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், இதையறிந்த திருக்கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்பு பகுதியை நேரில் சென்று நேற்று பார்வையிட்டு, அதிரடியாக வேலி அமைத்து, அறிவிப்பு பலகையும் வைத்து சுமார் ₹90 லட்சம் மதிப்பு கொண்ட கோயில் சொத்து அதிரடியாக மீட்கப்பட்டது. இந்நிகழ்வில், திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் வானவில் விஜய், செயல் அலுவலர் ஆ.குமரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மீட்கப்பட்ட சொத்திற்கு நியாய வாடகையை நிர்ணயம் செய்து திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டு தர ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் வானவில் விஜய் தெரிவித்தார்.

The post ₹90 லட்சம் மதிப்புள்ள கோயில் சொத்து மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Thiruvalleswarar ,Badi ,Ampathur ,Hindu Religious Charities Department ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...