×

மூதாட்டியின் சடலத்தில் இருந்து 10 பவுன் நகைகள் அபேஸ்: போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை

சேலம்: சேலம் நகரமலையில் உள்ள வழுக்குப்பாறையில் பெண் ஒருவரது உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். உடல் கிடந்த இடத்தின் அருகில் மணிபர்ஸ் கிடந்தது. அதில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ் இருந்தது. இதனை வைத்து பார்த்தபோது, இறந்த பெண் மயிலாடுதுறை திருவெண்காடு சரபோஜினி அக்ரஹாரத்தை சேர்ந்த தனம்(70) என்பவர் என தெரிந்தது.

தனத்தின் பேரன் ரூபன் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட தனத்தை சிகிச்சைக்காக சேலம் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து தனத்தின் மகன் சுந்தரமூர்த்தி அவரை அழைத்துக்கொண்டு டிசம்பர் 19ம்தேதி சேலம் வந்தார். ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் சிறுநீர்கழிப்பதற்கு தனம் இறங்கினார். அவர் காணாமல் போய் உள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் தனத்தின் மகன் சுந்தரமூர்த்தியை வரவழைத்து போலீசார் உடலை ஒப்படைத்தனர்.

அப்போது அவர் தன் தாய் 10 பவுன் நகை அணிந்திருந்தார் என்ற தகவலை தெரிவித்தார். அங்கு நகைகள் ஏதும் இல்லையே என போலீசார் கூறினர். இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடடினயாக சம்பவ இடத்திற்கு சென்று தேடுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து எஸ்.ஐ.சேகர் தலைமையில் 10 போலீசார் வழுக்குப்பாறைக்கு சென்று உடல் கிடந்த இடத்தின் அருகில் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதில் மூதாட்டி தனம் அணிந்திருந்த தங்க செயின் 1, 2 வளையல், மூக்குத்தி 2, 1 தோடு ஆகியவற்றை கண்டுபிடித்தனர். மொத்தம் 7 பவுன் நகை மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உயரதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழுகிய நிலையில் கிடந்த உடல்மீது தங்க செயின் இருந்துள்ளது. அதனை கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளனர். மீண்டும் போலீசார் தேடும்போது கீழே கிடந்து கண்டெடுத்ததாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது? உடல் மீது கிடந்த நகையை, முதலில் காட்டாமல் போலீஸ் தேடும்போது மட்டும் எப்படி கிடைத்தது? அதனை மறைத்து வைத்து தேடும்போது கொண்டு வந்து போட்டது யார்? என்பது போன்ற கேள்விகளுடன் உயரதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

The post மூதாட்டியின் சடலத்தில் இருந்து 10 பவுன் நகைகள் அபேஸ்: போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Salem ,Alaghapuram ,Salem Nagarmalai ,Abbess ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...