×

பார்வதிபுரத்தில் காதலன் வீட்டு முன்பு கேரள பெண் தர்ணா

*போலீசார் விசாரணை

நாகர்கோவில் : நாகர்கோவில் பார்வதிபுரத்தில் காதலன் வீட்டு முன்பு கேரளாவை சேர்ந்த பெண் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகரை சேர்ந்த 42 வயது வாலிபருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்காக பெண் தேடியுள்ளனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள நிறுவனத்தில் வாலிபருக்கு வேலை கிடைத்துள்ளது. அங்கு நாகர்கோவிலை சேர்ந்த நண்பரின் தோழியான திருவனந்தபுரம் அவனஞ்சேரி பகுதியை சேர்ந்த தாரா மித்ரா நிரஞ்சனா என்ற பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தாரா மித்ரா நிரஞ்சனா ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், கணவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக விகாரத்து பெற்றுள்ளார். தாரா மித்ரா நிரஞ்சனா வெளிநாட்டில் பணியாற்றி விட்டு, தற்போது திருவனந்தபுரம் உணவு பொருள் தாயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பார்வதிபுரம் சாரதா நகர் வாலிபர், தாராவிடம், திருமணம் செய்து கொள்வதாக கூறி திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, சென்னை என பல இடங்களுக்கும் சென்று விடுதிகளில் தங்கி இருந்தாராம்.

இந்நிலையில், நேற்று மதியம் சாராதா நகரில் உள்ள வாலிபரின் வீட்டின் முன்பு தாரா மித்ரா நிரஞ்சனா திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து வடசேரி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தாரா போலீசாரிடம் கூறுகையில், தன்னிடம் சாரதா நகர் வாலிபர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். மேலும் வாலிபர் சொந்தமாக தொழில் தொடங்க உள்ளதாக கூறி, தன்னிடமிருந்து 25 பவுன் நகை, 3 லட்சம் ரொக்கம் பெற்றார்.

மேலும் வாலிபர் தன்னுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை, ஆபாச வீடியோவாக பதிவு செய்து லேப்டாப்பில் வைத்துள்ளார். தற்போது என்னிடம் சரியாக பேசுவதில்லை. திருமணம் குறித்து பேசினால், அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். மீறி வற்புறுத்தினால், என்னுடன் உல்லாசமாக இருந்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாகவும், கொலை செய்து விடுவேன் எனவும் உறவினர்களுடன் சேர்ந்து மிரட்டி வருகிறார்.எனவே வாலிபர் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.வாலிபரின் வீடு உட்பக்கமாக பூட்டியிருந்ததுடன், இளம்பெண் தர்ணா காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பார்வதிபுரத்தில் காதலன் வீட்டு முன்பு கேரள பெண் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Kerala ,Parvathipuram ,Nagercoil ,Parvathipuram Sarada Nagar ,
× RELATED சுப்பையார் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் பலி