டெல்லி : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுகளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து 2 நாட்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்
இந்த நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர்லால் குமாவத் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகளான ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பானையை இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் ராகுல் சர்மா, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.முன்னதாக, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.