×

இலங்கையில் இருந்து 3 குழந்தைகளுடன் தம்பதி தனுஷ்கோடி வருகை: மரைன் போலீசார் மீட்டு விசாரணை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து 3 குழந்தைகளுடன் தம்பதி அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்தனர். அவர்களை மரைன் போலீசார் மீட்டு, விசாரித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (42). இவரது மனைவி சங்கரி (26). இவர்களது மகள்கள் ஜெசிகா (6), ஜெனுசிகா (3), இஸ்பிஸ்கா (2). இவர்கள் 5 பேரும் இலங்கை மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நேற்று இரவு 11 மணியளவில் படகில் தனுஷ்கோடிக்கு புறப்பட்டு வந்தனர். இவர்களை ஏற்றி வந்த படகோட்டிகள் நடுவழியில் தனுஷ்கோடி கடலில் உள்ள 4ம் மணல் திட்டில் இறக்கிவிட்டு சென்று விட்டனர்.

இன்று அதிகாலை கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இது குறித்து ராமேஸ்வரம் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மணல் திட்டு பகுதிக்கு படகில் சென்ற போலீசார், 3 குழந்தைகள் உள்பட தம்பதியை மீட்டு இன்று காலை 10 மணியளவில் கடற்கரைக்கு அழைத்து வந்தனர். இதை தொடர்ந்து மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

The post இலங்கையில் இருந்து 3 குழந்தைகளுடன் தம்பதி தனுஷ்கோடி வருகை: மரைன் போலீசார் மீட்டு விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Dhanushkodi ,Rameswaram ,Nandakumar ,Vavuniya ,Sankari ,Jessica ,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு