×

ராயபுரம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடியில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்..!!

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடியில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-180, திருவள்ளுவர் நகர் முதல் மற்றும் 2வது அவென்யூவில் நடைபெற்று வரும் சாலை மற்றும் நடைபாதை பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., 06.02.2024 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ச்சியாக, திருவான்மியூர் கடற்கரை சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதைப் பணியினையும், அங்குள்ள கடற்கரையினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கடற்கரையில் கூடுதலாக குப்பைத் தொட்டிகள் வைத்திடவும், அதற்கான அறிவிப்புப் பலகைகளை வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அங்குள்ள வியாபாரிகளிடம் கடையின் முகப்பில் குப்பைத் தொட்டிகளை வைத்திடவும், குப்பையை பொது வெளியில் போடாமல் குப்பைத் தொட்டியில் போடவும் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பெருங்குடி மண்டலம், வார்டு-184, பெருங்குடி மாநகராட்சி சாலையில் ரூ.10.08 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அங்குள்ள அம்மா உணவகத்தின் செயல்பாடுகள் குறித்தும், அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தினைப் பார்வையிட்டு, குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் பேசியதாவது: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தற்காலிகமாக 50 ஏக்கர் நிலப்பரப்பை விட்டுவிட்டு மற்ற இடங்களில் குப்பை கொட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடையே முறையாக குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்தும், குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் என்பது குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 62 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகளும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 32 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகளும் உள்ளது. இதில் பெருங்குடியில் சுமார் 24 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுக்கப்பட்டு, 50 ஏக்கருக்கு மேல் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் அறிவுரையின்படி, கொடுங்கையூரிலும் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே, பொதுமக்கள் சாதாரணமாக நினைக்கக்கூடிய குப்பை என்ற ஒன்று, ஒரு நாளைக்கு ஒரு நபரால் உருவாக்கக்கூடிய 700 கிராம் குப்பை என்பது சென்னையில் நாளொன்றுக்கு 6300 மெட்ரிக் டன் குப்பை உருவாகிறது. இந்தக் குப்பை தான் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் வீடுகள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு குப்பை மாற்று நிலையங்களுக்கு சென்று, அதன் பிறகு குப்பை கொட்டும் வளாகத்திற்கு வருகிறது. இது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்பதையும், இது நம் குப்பை என்பதையும், இதற்காக மாநகராட்சியில் பல்வேறு நிலையில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பதையும் பொதுமக்கள் உணர வேண்டும்.

பொதுமக்கள் சாதாரண குப்பை என்று கருதும் நிலையில், குப்பையிலே பணியாற்றக்கூடிய கடமையில் பலர் உள்ளனர். எனவே, பொதுமக்களாகிய நீங்கள் குப்பைகள் உருவாவதைக் குறைக்க முடியும், குப்பையை முறையாக தரம் பிரித்து கொடுக்க முடியும். குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டுமே கொட்ட வேண்டும். இதை பொதுமக்கள் நினைத்தால் செய்ய முடியும். மேலும், கோவில்கள் மற்றும் ஆலயங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்வதைக் குறைக்க வேண்டும்.

அடுத்த 2 மற்றும் 3 ஆண்டுகளிலாவது இந்த குப்பை கொட்டும் வளாகங்களில் உள்ள குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு, மிகவும் குறைவான அளவிலான குப்பைகளை குப்பை கொட்டும் வளாகங்களுக்கு வரக்கூடிய நிலையை உருவாக்குவதற்கான முயற்சியில் தான் இதுபோன்ற பெரிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பயோ கேஸ் தயாரித்தல், பிளாஸ்டிக் பொருட்களை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்புதல், பிற பொருட்களை கொண்டு பயன்படக்கூடிய பொருட்கள் தயாரித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலையில் கடற்கரையில் மேற்கொண்ட களஆய்வின்போது, அங்கு 58 குப்பை தொட்டிகள் உள்ளது. ஆனால் பொதுமக்கள் குப்பையை குப்பைத் தொட்டியில் போடாமல் ஆங்காங்கே சிதறி போட்டு விடுகின்றனர். அங்கு தூய்மைப் பணியாளர்கள் கடமையின் காரணமாக ஆங்காங்கு காணப்படும் குப்பையை சேகரித்து வருகின்றனர். அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையை போட்டால் பணி எளிதில் முடியும். பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் தான் அனைத்திலும் வெற்றி பெற முடியும் எனத் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஆலந்தூர் மண்டலம், வார்டு-156க்குட்பட்ட லலிதா நகர் முதல் தெரு, தேவி கருமாரியம்மன் தெரு உள்ளிட்ட உட்புறச் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு சாலைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பொதுமக்களின் குறைகளை உடனடியாக கேட்டறிந்து சரிசெய்திட அலுவலருக்கு அறிவுறுத்தினார். பின்னர், ஆலந்தூர் மண்டலம், வார்டு-156, மதனந்தபுரம் சென்னை நடுநிலைப்பள்ளியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, அங்கு பயிலும் மாணவர்களிடம் படிப்பின் அவசியம் குறித்தும், எவ்வாறு படிப்பது என்பது குறித்தும் கலந்துரையாடி அறிவுரை வழங்கினார்.

தொடர்ச்சியாக, சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறையினரால் ஒப்படைக்கப்பட்ட சாலையில் நடைபெறும் சாலைப்பணியினைப் பார்வையிட்டு, பணியினை முழுமையாகவும், துரிதமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, இராயபுரம் மண்டலத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட மின்ட் பூங்காவினையும், மாடிப் பூங்கா மற்றும் அண்ணா பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பி.ஆர்.என். கார்டனில் செயல்பட்டு வரும் நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

லாயட்ஸ் காலனியில் புதிதாக கட்டப்பட்டு வரும் செல்லப்பிராணி மற்றும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுமானப் பணியினையும், முத்தையா தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகர ஆரம்ப சுகாதார மையத்தின் கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இன்று அடையாறு மண்டலத்திற்குட்பட்ட உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்தும் நிலையத்தினைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர்கள், கூடுதல் மாநகர நல அலுவலர், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post ராயபுரம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடியில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்..!! appeared first on Dinakaran.

Tags : J. Radhakrishnan ,Rayapuram ,Alandur ,Adyar ,Perungudi ,CHENNAI ,Chief Secretary ,J.Radhakrishnan ,Chennai Corporation ,Metropolitan Chennai Corporation ,Adyar Zone ,Ward-180 ,Thiruvalluvar Nagar 1st ,2nd Avenues ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...