×

பிரதோஷங்களும் அதன் வகைகளும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது.

8 தினசரி பிரதோஷம்: தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு ‘‘முக்தி’’ நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

8 பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் ‘‘திரயோதசி’’ திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக, அன்னை பார்வதிதேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் ‘‘கபாலீஸ்வரரை’’ வழிபடுவது சிறப்பாகும்.

8 மாதப் பிரதோஷம்: பௌர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் ‘‘திரயோதசி’’ திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் ‘‘பாணலிங்க’’ வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

8 நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய ‘‘திரயோதசி திதி’’யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

8 பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

8 திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த் தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘‘திவ்யப் பிரதோஷம்’’ ஆகும். இந்த நாளன்று மரகதலிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால், பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

8 தீபப் பிரதோஷம்: பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீபதானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8 அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்: வானத்தில் ‘‘வ’’ வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, ‘‘சப்தரிஷி மண்டலம்’’ ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

8 மகாபிரதோஷம்: ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘‘மகாபிரதோஷம்’’ ஆகும். இந்த மகாபிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். குறிப்பாக, சென்னை வேளச்சேரியில் உள்ள, ‘‘தண்டீஸ்வர ஆலயம்’’.

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ‘‘திருப்பைஞ்ஞீலி’’ சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ‘‘ஸ்ரீவாஞ்சியம்’’ சிவ ஆலயம், கும்பகோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள ‘‘திருக்கோடி காவல்’’ சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகாசிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், ‘‘மகாபிரதோஷம்’’ எனப்படும்.

8 உத்தம மகா பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகாபிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

தொகுப்பு: அனுஷா

The post பிரதோஷங்களும் அதன் வகைகளும் appeared first on Dinakaran.

Tags : Lord Shiva ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்