×

சைதை துரைசாமி மகன் மாயம் ஆற்றில் கிடைத்த உடல் பாகம்: டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைப்பு

சிம்லா: சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து சைதை துரைசாமி மகன் வெற்றி மாயமானதில், ஆற்றின் கரையோரம் மனித உடல் பாகம் மீட்கப்பட்டுள்ளது. இது வெற்றி துரைசாமிக்கு சொந்தமானதா என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2011 ம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி(45) தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசா நகரில் இருந்து சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். உள்ளூரை சேர்ந்த தன்ஜின் காரை ஓட்டினார். கின்னவுர் மாவட்டத்தில் பாங்கி நல்லா பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், 200 மீட்டர் ஆழத்தில் உள்ள சட்லஜ் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியும், ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போயினர். பின்னர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற பகுதியில் ஆற்றில் தண்ணீரின் வேகம் மிக வேகமாக உள்ள காரணத்தால் தேடும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மாயமான தனது மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று சைதை துரைசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சட்லஜ் நதி அருகே வசிக்கும் பழங்குடியின மக்களிடமும் தகவல் தெரிவிக்க காவல்துறை மூலம் அவர் அறிவித்துள்ளார். கின்னவுர் துணைஆணையர் அமித்குமார் சர்மா இதுகுறித்து கூறுகையில்,’ ஆற்றில் கார் கவிழ்ந்ததில் காணாமல் போன சுற்றுலாப் பயணி வெற்றியின் தந்தை சைதை துரைசாமியின் வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. சென்னையின் முன்னாள் மேயரான சைதை துரைசாமி தனது மகனைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடைய நம்பிக்கைக்குரியவர்களும் என்னைத் தொடர்பு கொண்டனர். சைதை துரைசாமி தனது மகனைக் கண்டுபிடிக்க உதவுமாறு உள்ளூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்’ என்று தெரிவித்தார். இதற்கிடையே சட்லஜ் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் கரை ஓரம் இருந்த பாறையில் மனித உடல்பாகத்தை மீட்டனர். அது காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அம்மாநில போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

 

The post சைதை துரைசாமி மகன் மாயம் ஆற்றில் கிடைத்த உடல் பாகம்: டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Saidai Duraisamy ,Mayam river ,Sutlej river ,Vetri ,Vetri Duraisamy ,
× RELATED வெற்றி துரைசாமி மறைவுக்கு சைதை...