×

சென்னை செம்மொழி பூங்காவில் பிப். 10ம் தேதி மலர் கண்காட்சி: ஒரு வாரம் நடக்கிறது

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி வரும் 10ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடக்கிறது. இந்த கண்காட்சியில், அரியவகை மலர்கள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடைகாலம் என்றாலே ஊட்டி, கொடைக்கனல், ஏற்காடு ஆகிய மலை பிரதேசங்களில் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை சென்னையிலும் நடத்த வேண்டும் என்ற சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் தோட்டக் கலைத்துறை சார்பில், சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கடந்த 2010ல் செம்மொழி பூங்காவை அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்.

இந்த பூங்காவில் ஏரளாமான மரங்கள், செடிகள், கொடிகள் என 500 க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளது. இப்பூங்காவில் எப்போதும் மக்கள் வருகை அதிகமாகவே இருந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதனால் மக்கள் வருகையும் குறைந்தது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு செம்மொழி பூங்கா மீண்டும் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் இங்கு மலர் கண்காட்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக தோட்டக்கலைத்துறை நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி வரும் 10ம் தேதி தொடங்க உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை வெருவாக கவரும் வகையில் கிருஷ்ணகிரி, கொடைக்கானல், குமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் எடுத்துவரப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. சுமார் 10 லட்சம் மலர்கள் கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மலர் கண்காட்சி சுமார் ஒருவாரம் வரை நடைபெறலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை செம்மொழி பூங்காவில் பிப். 10ம் தேதி மலர் கண்காட்சி: ஒரு வாரம் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Semmozhi Park, Chennai ,10th Flower Fair ,CHENNAI ,Chennai Semmozhi Park ,Ooty ,Kodaikanal ,Yercaud ,10th Flower Show ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...