×

23 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப்படகுகளை, இலங்கை கடற்படை சிறைபிடித்தது. படகில் சென்ற 23 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகள், சிறையில் அடைக்கப்பட்ட 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடி துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 28.10.2023ல் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முருகனை விடுதலை செய்ய வேண்டும். 2018ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படை கைப்பற்றிய 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், நல்ல நிலையில் உள்ள படகுகளை மீட்க வேண்டும்.
கடலில் மூழ்கி சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை எம்பி தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றக் கோரி, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் புறக்கணிப்போம்’’ என்றனர்.

 

The post 23 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lanka Navy ,Tamil Nadu ,Sri Lanka ,Thangachimadam ,Pamban… ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...