×

மனோரா பகுதியை தலைமை இடமாகக்கொண்டு கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்

 

பேராவூரணி,பிப்.5: மனோரா பகுதியை தலைமை இடமாகக்கொண்டு, கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்று வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார். சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புதுப்பட்டினத்தில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத்திட்டம் சார்பில் மீனவர்களுக்கு கடல் பசு பாதுகாப்பு தொடர்பான சமுதாய விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி வழிகாட்டுதலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் மீனவர்களிடம் பேசுகையில், அபூர்வ வகை கடல் வாழ் உயிரினமான கடற்பசு, கடல் வளத்தை பாதுகாக்கும் முக்கியமான உயிரினமாக திகழ்கிறது. இப்பகுதியில் அதிகமாக காணப்படும் இந்த அபூர்வ உயிரினத்தை காப்பாற்றும் வகையில் மனோரா பகுதியை தலைமை இடமாகக்கொண்டு, கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

கடற்பசுவை காப்பாற்றி உயிருடன் மீண்டும் கடலில் விட்ட மீனவர்களை பாராட்டுகிறேன். கடற்பசுவின் முக்கியத்துவத்தை உணர்ந்து மீனவர்கள் அனைவரும் அதனை பாதுகாக்க வேண்டும். மீனவர்கள் வலையில் சிக்கும் அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடற்பசுவை காப்பாற்றி கடலுக்குள் விடும் மீனவர்களுக்கு ரொக்கப்பரிசு,சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும் என்றார். இந்த கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ஜெயபால் மற்றும் அமீர்முகைதீன், ரகமத்துல்லா, ஓம்கார் பவுண்டேஷன் அன்பு, வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர்கள் சபரிநாதன், மணவாளன், கிராம மீனவ தலைவர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடற்கரை கிராமங்களான கழுமங்குடா, செந்தலைவயல், கணேசபுரம், வள்ளுவர்புரம், சோமநாதபட்டினம் ஆகிய கிராமங்களிலும் கடற்பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

The post மனோரா பகுதியை தலைமை இடமாகக்கொண்டு கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Sea Sponge Conservation Center ,Manora ,Peravoorani ,Dinakaran ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...