×

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது: 2 படகுகளும் பறிமுதல், மீனவர் குடும்பங்கள் கொந்தளிப்பு

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்யாததால் மீனவர் குடும்பங்கள் கொந்தளிப்பில் உள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இரவில் மீன்பிடித்து ெகாண்டிருந்தபோது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்து மீனவர்களை விரட்டியடித்தனர். ஒரு சில படகுகளை ரோந்து கப்பலில் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

அப்போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் ஜேம்ஸ், சகாயராஜ் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். இதனை பார்த்த சக மீனவர்கள் தங்களுடைய படகுகளை வேறு பகுதிக்கு ஓட்டி சென்று இரவு முழுவதும் மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பினர். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு படகில் இருந்த மீனவர்கள் அந்தோணி, இளங்கோ, அமுல், சுபாஷ் சந்திரபோஸ், சுதாகர், மணி, பெக்கர், சேவியர், ஆரோக்கிய ரஞ்சித் உள்ளிட்ட 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் ஊர்காவல்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

அங்கு கடற்படை உயர் அதிகாரிகள் மீனவர்களிடம் விசாரணை செய்தனர். பின்னர், சிறைபிடித்த 23 மீனவர்களையும் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை கடல் தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் வசம் நேற்று காலை ஒப்படைத்தனர். ஒரே நாளில் 23 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் உள்ள மீனவர் குடும்பத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் பிப். 14ம் தேதி வரை சிறையில் அடைக்க யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

* 245 விசைப்படகுகளை மீட்க ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை
நாகர்கோவிலில் தமிழ்நாடு மீன்வளத்துறை – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களை துன்புறுத்துவதும் நடக்கிறது. முதலமைச்சர் உடனடியாக பிரதமருக்கும், வெளியுறவு துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், படகையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிகழ்வு நடக்கிறது. மீனவர்களை விடுவித்துவிட்டு உள்ளனர்.

ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட 245 படகுகளை இலங்கை கடற்படை விடுவிக்கவில்லை. மீனவர்கள் படகுகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் உள்ளனர். ஒன்றிய அரசின் அமைச்சர்களும், பிரதமரும் கண்டுகொள்ளவில்லை. படகுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள தவிக்கின்ற மீனவர்களின் நிலையை அறியாக பிரதமராக பாரத பிரதமர் உள்ளார். இலங்கையில்பிடித்து வைத்திருக்கின்ற படகுகளை எல்லாம் மீட்டுத்தரும் பணிகளை பிரதமர் செய்ய வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது: 2 படகுகளும் பறிமுதல், மீனவர் குடும்பங்கள் கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Rameshwaram ,Bak Strait Sea ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்