×

தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் தூலிப் மலர் அலங்காரம் சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு

ஊட்டி, பிப்.4: ஊட்டி தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டள்ள தூலிப் மலர் அலங்காரத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இது போன்று கோடை சீசனின் போதும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சி ஐந்து நாட்கள் நடக்கும். மலர் கண்காட்சியின் போது, பூங்காவில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, அவைகள் பூத்துக்குலுங்கும்.
மேலும், 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பல்வேறு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த தொட்டிகளில் லில்லியம், ஜெர்பரா உட்பட பல வெளி நாடுகளில் காணப்படும் மலர்களும் நடவு செய்யப்பட்டு அந்த மலர்கள் பூத்து காணப்படும். சில சமயங்களில் வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்களை கொண்டு மாடங்களில் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக, வெளி நாடுகளில் மலர்கள் கொண்டு வரப்படும். ஹாலாந்து நாட்டில் காணப்படும் தூலிப் மலர்கள் கொண்டு வரப்பட்டு காட்சி மாடத்தில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், முதல் முறையாக கடந்த ஆண்டு தூலிப் மலர் நாற்றுக்கள் கொண்டு வரப்பட்டு சோதனை முயற்சியாக தாவரவியல் பூங்கா நர்சரியில் நடவு செய்யப்பட்டன. இதனை மிகவும் பாதுகாப்புடன் பூங்கா நர்சரி ஊழியர்கள் பராமரித்து வந்தனர். இந்த செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்தன. இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். சோதனை முயற்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து இம்முறையும் தாவரவியல் பூங்காவில் தூலிப் மலர்கள் நடவு செய்யப்பட்டன. இம்முறை 250 தொட்டிகளில் இந்த நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

தற்போது, சில தொட்டிகளில் ஊதா மற்றும் மஞ்சள் நிறத்தில் தூலிப் மலர்கள் பூத்துள்ளன. இவைகள் தற்போது கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த தூலிப் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்தவுடன் இந்த மலர்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக கண்ணாடி மாளிகையில் வைக்கப்படும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

The post தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் தூலிப் மலர் அலங்காரம் சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Botanical Garden ,Botanical Garden Glass House ,
× RELATED பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்