×

காஞ்சிபுரத்தில் இருவேறு இடங்களில் கத்தி முனையில் வழிப்பறி: ரவுடி கும்பலுக்கு வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருவேறு இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் ரவுடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கபாலி என்பவரின் மகன் சுரேஷ் (29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது உறவினரான சுதர்சன் என்பவருடன் ஓரிக்கை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுதர்சனை வழி மடக்கி தாக்கிய மணிகண்டன் (21), ஜோதி (18), பரத் (29) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட சுரேஷை பீர்பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். மேலும், அவரிடமிருந்த 1,200 ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இதில் மணிகண்டன் மீது 2 வழக்குகளும், பரத் என்பவர் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் 13 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, பெரியகாஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மகன் கார்த்தி (31). இவர், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு உப்புக்குளம் விநாயகர் தெரு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டூ வீலரில் வந்து அவரை வழிமறித்த சதீஷ் (எ) ஆர்.கே.சதீஷ் (33), விஜயகுமார் (23), மணிகண்டன் (21) ஆகியோர் கத்தியைக் காட்டி மிரட்டி கார்த்தியிடமிருந்து 1,200 ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இதில் சதீஷ் மீது 2 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு சம்பவங்கள் தொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விஷ்ணுகாஞ்சி போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் இருவேறு இடங்களில் கத்தி முனையில் வழிப்பறி: ரவுடி கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Robbery ,Kancheepuram ,Kanchipuram ,Kabali ,Suresh ,Orikai Thenampakkam ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...