×

வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகளை திருடிய 2 வாலிபர்கள் கைது

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம், மதுரை மீனாட்சிபுரம், கோதாவரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்குமார். இவர் சிறுசேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 19ந் தேதி தனது மனைவியின் மருத்துவ பரிசோதனைக்காக ஐதராபாத் சென்றுவிட்டு 21ம் தேதி காலை 11 மணியளவில் இவர் மீண்டும் வீட்டிற்க்கு வந்துள்ளார். அப்போது வீட்டுக் கதவின் முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பெட்ரூமில் உள்ள அலமாரியில் இருந்த பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. அதில் வைத்திருந்த வைர மோதிரம் மற்றும் தங்க நகைகள் களவு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் தலைமையிலான போலீசார் நெல்லிக்குப்பம் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற கொசுறு சூர்யா (23), விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (23) என்பது தெரியவந்தது. இருவரும் சரண்குமார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகளை திருடிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Guduvancheri ,Sarankumar ,Oorpakkam ,Meenakshipuram ,Godavari Nagar ,Madurai ,Sirusheri ,Hyderabad ,
× RELATED கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த...