திருவில்லிபுத்தூர், பிப். 3: திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவார தோப்புகளில் தென்னை, பனை மரங்களை காட்டு யானைகள் பிடுங்கி நாசப்படுத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்னந்தோப்புகள் அதிகமாக உள்ளன.
இந்நிலையில், மலைப்பகுதியில் இருந்து இறங்கி வரும் காட்டு யானைகள் மலையடிவார விளைநிலங்களில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தியும், தோப்புகளில் உள்ள மரங்களை பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்தி வருகின்றன. கடந்த சில மாதமாக மலையடிவாரத்தில் உள்ள பந்தப்பாறை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவைகள் தோப்புகளில் புகுந்து தென்னை, பனை மரங்களை பிடுங்கி எறிகின்றன.
குறிப்பாக பெருமாள்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட தோப்பில் இருந்த தென்னை மற்றும் பனை மரங்களையும், அருகில் இருந்த தோப்புகளில் தென்னை மரங்களையும் பிடுங்கி எறிந்துள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பந்தப்பாறை பகுதியில் கடந்த சில மாதமாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
தோப்புகளில் உள்ள பனை, தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினர் எங்களுக்கு பட்டாசு வழங்கி உள்ளனர். யானைகள் இருக்கும் இடங்களை அறிந்து, பட்டாசு வெடித்து அவைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இருப்பினும் விளைநிலங்களில் பயிர்களையும், தோப்புகளில் மரங்களையும் சேதப்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.
The post திருவில்லிபுத்தூர் அருகே தோப்புகளில் புகுந்து தென்னை, பனைகளை நாசம் செய்யும் காட்டு யானைகள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.