×

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் மகன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை கைது

சோழிங்கநல்லூர்: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த தந்தை, மகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார். செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் குருசாமி (60). மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன் தினேஷ் (30) மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, தனித்தனியே வசிக்கின்றனர். தினேஷ் லாரி மெக்கானிக். குருசாமியின் மனைவி இறந்துபோனதால், மகன் மற்றும் மகள் வீட்டில் இவர் வசித்து வந்துள்ளார். குருசாமி மற்றும் தினேஷுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் இருந்த தினேஷிடம் குடிப்பதற்கு குருசாமி பணம் கேட்டுள்ளார். பணம் தர தினேஷ் மறுத்துள்ளார். இதனால், தந்தை-மகனுக்கு இடையே வாய்த்தகராறு முற்றியது. பின்னர், வெளியே சென்ற குருசாமி, நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் மகன் வீட்டுக்கு திரும்பினார். அவரது கையில் பெட்ரோல் குண்டுகள் இருந்தன. பின்னர், தனது மகனை வெளியே அழைத்த குருசாமி, ‘‘எனக்கு மது குடிக்க பணம் தரமாட்டேன் என்று சொன்னியே.

இப்போ பார், உன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுகிறேன்,’’ என்று கூறியபடி, அவர் வீட்டின் மீது ஒரு பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது. இதில், அதிர்ச்சியடைந்த தினேஷ், உடனடியாக ஓடிச்சென்று அது வெடிப்பதற்குள் தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டார். இதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, குருசாமியின் கையில் இருந்த மேலும் சில பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றினர். சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய குருசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் மகன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Guruswamy ,Netaji Street, Gandhi Nagar ,Nallur Panchayat ,Sengunram ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...