×

கதிரடிக்கும் இயந்திரம் கவிழ்ந்து 2 பெண்கள் உடல் நசுங்கி சாவு: 4 பேருக்கு தீவிர சிகிச்சை

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கதிரடிக்கும் இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு பெண்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம் கீரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு சொந்தமான நெல் கதிரடிக்கும் இயந்திரத்தினை அதே பகுதியைச் சேர்ந்த செங்கமலை என்பவர் இயக்கி வந்தார். நேற்று கீரிப்பட்டி அருகே மேல் தொம்பை பகுதிக்கு இயந்திரத்தை கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு, கதிரடிக்கும் பணி முடிந்ததும் மாலையில் கதிரடிக்கும் இயந்திரத்தை டிரெய்லர் வண்டியுடன் இணைத்து கீரிப்பட்டிக்கு புறப்பட்டனர். அப்போது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த கீரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர், தாங்களும் ஊருக்கு வருவதாக கூறி டிரெய்லரில் ஏறிக்கொண்டனர். அண்ணா நகர் பிரிவு ரோடு அருகே வளைவான பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக டிரெய்லர் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கீழே விழுந்த பெண்கள் மீது கதிரடிக்கும் இயந்திரம் விழுந்தது. இதில் சிக்கி அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.

அப்போது, ஜெயா(40), நதியா(28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. மேலும், டிரெய்லரில் பயணித்த ராணி(55), கன்னியம்மாள்(42), அமாவாசை(70) மற்றும் பழனியம்மாள்(44) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் வாகனத்தை ஓட்டிய செங்கமலை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.  இந்த விபத்து குறித்து மல்லியகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கதிரடிக்கும் இயந்திரம் கவிழ்ந்து 2 பெண்கள் உடல் நசுங்கி சாவு: 4 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Athur ,Salem district ,Manokaran ,Keeripatti ,Dinakaran ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...