×

நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர் பிரபல தொழிலதிபரை கொடூரமாக தாக்கும் மகன்

*சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சேலம் : சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிரபல சேகோ தொழிற்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக, பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், குழந்தைவேலுவை அவரது மகன் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியில், குழந்தைவேலு வீட்டிற்குள் இருக்கையில் அமர்ந்துள்ளார்.

அப்போது அவரது முகத்தில் மகன் திடீரென கொடூரமாக தாக்குகிறார்.இதனால் அவரது வாய், முகத்தில் இருந்து ரத்தம் வழிகிறது. அவர் இருக்கையிலேயே சரிந்து விழுகிறார். இதனை பார்த்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் ஓடி வந்து, சரிந்து விழுந்த அவரை பிடித்து உட்கார வைக்கிறார். வீட்டில் இருந்து வந்த மற்றொரு நபரும், பெண்ணும் ரத்தத்தை துடைக்கின்றனர்.

அவரை தாக்கும் மகனை ஒருவர் இழுத்து செல்கிறார். மீண்டும் இழுத்து செல்பவரை தட்டி விட்டு, வீட்டு வாசலில் கிடக்கும் செருப்பை எடுத்து தந்தை மீது மகன் எறிகிறார். இவ்வாறு 4 நிமிடம் அந்த காட்சிகள் ஓடுகிறது. இந்தசம்பவம், ஆத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் நடந்ததாக செய்தி பரவி வரும் நிலையில், சேலம் மாவட்ட போலீசார் இதனை மறுத்துள்ளனர்.

இதுபற்றி சேலம் மாவட்ட போலீசார் கூறுகையில், `சமூக வலைதளத்தில் தந்தை ஒருவரை, மகன் தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்றது போன்று தகவல் பரவி வருகிறது. இந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெறவில்லை,’ என்றனர். இதற்கிடையில் வழக்கறிஞர் விஜயராகவன் என்பவருக்கு கிடைத்த இந்த வீடியோவை, அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதுபற்றி விஜயராகவன் கூறுகையில், ‘சொத்துக்காக தந்தையை மகன் கொடூரமாக தாக்கியுள்ளார்.

ஆனால், அந்த மாவட்ட போலீசார் ஒருதலை பட்சமாக நடந்துள்ளனர். காயமடைந்தவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும், 2வது நாளில் அவர் விஷம் குடித்து இறந்து போனதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அந்த கொடூரமான தாக்குதலுக்கு, போலீசார் எந்த வித வழக்கும் பதிவு செய்யவில்லை. ஏற்கனவே இரும்பு கம்பியால் தந்தையை அடித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகனை சேகோ ஆலை பக்கம் செல்லக்கூடாது என போலீசார் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

The post நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர் பிரபல தொழிலதிபரை கொடூரமாக தாக்கும் மகன் appeared first on Dinakaran.

Tags : Athur ,Salem ,Attur ,Sago ,Perambalur district ,
× RELATED ஆத்தூரில் ₹4.78 கோடிக்கு மஞ்சள் ஏலம்