×

ஓஎம்ஆர் சாலையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி தொடக்கம்

 

மாமல்லபுரம், பிப்.2: தினகரன் செய்தி எதிரொலியால் ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கூட்ரோட்டில் இருந்து திருப்போரூர் செல்லும் ஓஎம்ஆர் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும், வாகனம் நிறைந்து பரபரப்பாக காணப்படும் இச்சாலையில், ஆங்காங்கே சில இடங்களில் சாலை சேதமடைந்து காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1 மாதத்துக்கு முன்பு மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் பகுதியில் இருந்து பையனூர் பகுதி வரை ஓஎம்ஆர் சாலையில் சிறு, சிறு சேதங்களை சரி செய்வவதற்காக நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் 1.5 கி.மீ. தூரத்திற்கு சாலையின் இரண்டு புறமும் மேலோட்டமாக சுரண்டி எடுத்தனர். ஆனால், 1 மாதத்தை கடந்தும் அங்கு சாலை போடாமல் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், உள்ளூர் மக்கள் தங்களது வாகனங்களை சரிவர இயக்க முடியாமல் சிரமமப்பட்டு வந்தனர்.

இந்த குறிப்பிட்ட, பகுதியில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று, பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு திரும்பும்போது விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து, கடந்த 23ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மூலம் அங்கு சாலை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post ஓஎம்ஆர் சாலையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Dhinakaran ,Mamallapuram Pooncheri Koodrod ,Tirupporur ,OMR ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...