×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 17 அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

 

 

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 17 அதிகாரிகளும் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்து மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காவல்துறை, மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகளை இந்த வழக்கில் இணைத்து ஹென்றி திபேன் தரப்பில் நேற்று கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, சம்பந்தப்பட்ட 17 அதிகாரிகளும் பதிலளிக்கும் வகையில், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 17 அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Chennai ,Chennai High Court ,National Human Rights Commission ,Tuticorin shooting ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...