கொடைக்கானல், ஜன. 31: கொடைக்கானல் அருகே வில்பட்டி குறிஞ்சி நகரில் சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது குறிஞ்சி நகர். இங்கு 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிக்கு செல்லும் சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இதனால் இச்சாலை வழியே செல்லும் பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இச்சாலை வழியே இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலையும் இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமுறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிஞ்சி நகருக்கு செல்லும் சாலையை உடனே சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொடைக்கானலில் குண்டும், குழியுமானது குறிஞ்சி நகர் சாலை: சீரமைத்து தர கோரிக்கை appeared first on Dinakaran.