×

சண்டிகர் மேயர் தேர்தலில் தில்லுமுல்லு: வாக்குச்சீட்டுகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி, பேனாவால் திருத்தம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு

சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி அமித் பாண்டே பேனாவால் திருத்தம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. திட்டமிட்டே வாக்கு சீட்டுகளில் தேர்தல் அலுவலர் திருத்தம் செய்து செல்லாது என அறிவித்தாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பொறுப்புக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன. மேயர் பதவிக்கு குமாரை ஆம் ஆத்மி கட்சி முன் நிறுத்தியது. பாஜக மனோஜ் சோங்கரை வேட்பாளராக நிறுத்தியது. மூத்த துணை மேயர் பதவிக்கு, காங்கிரஸின் குர்பிரீத் சிங் காபியை எதிர்த்து பாஜகவின் குல்ஜீத் சந்து போட்டியிட்டார். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பாஜக சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.

சண்டிகர் மாநகராட்சியில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்த நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் சேர்ந்து மொத்தம் 20 உறுப்பினர்களை கொண்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரி இதில், 8 வாக்குகள் செல்லாது என்று கூறிய நிலையில் 16 வாக்குகளை பெற்ற பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனை அடுத்து பாஜக குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையான குற்றம் சாடியுள்ளது.

8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப்குமார் வழக்கு தொடந்துள்ளார். இந்த வழக்கை நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக பஞ்சாப் – ஹரியான உயர்நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

இதனை அடுத்து வாக்குச்சீட்டுகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி அமித் பாண்டே, பேனாவால் திருத்தம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்
சண்டிகர் மேயர் பதவியை குறுக்கு வழியில் பாஜக கைப்பற்றியது வெட்க கேடான ஜனநாயக விரோதச் செயல். ஜனநாயக மாண்புகளை மீறுவது பாஜகவின் இயல்பு என்பதை சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு காட்டுகிறது என காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.

கெஜிரிவால்
சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே பாஜக கீழ்த்தரமாகச் செயல்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். மேயர் தேர்தலிலேயே இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்ட பாஜக, பொதுத்தேர்தலில் எந்த கீழ்நிலைக்கும் செல்லும். மேயர் தேர்தலில் வெற்றிபெற பட்டப்பகலில் அப்பட்டமான மோசடியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜகவின் செயல் கவலை அளிப்பதாக, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கொஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

The post சண்டிகர் மேயர் தேர்தலில் தில்லுமுல்லு: வாக்குச்சீட்டுகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி, பேனாவால் திருத்தம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,election ,Dillumulu ,Amit Pandey Pena ,Chandigarh mayoral election ,Atmi ,Congress ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்