×

2வது திருமணத்தை தட்டிக்கேட்ட மனைவி கொன்று புதைப்பு 8 மாதங்களுக்கு பின் கணவர் சிக்கினார்

திருமலை: திருப்பதியில் 2வது திருமணத்தை தட்டிக்கேட்ட மனைவியை கொன்று புதைத்த அவரது கணவர் 8 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவீந்திரரெட்டி (30), கோழிப்பண்ணை உரிமையாளர். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொண்டவாடா விலாஸ் அருகே தனது கார் திருடு போனதாக சந்திரகிரி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மற்றும் அதை திருடியவர்களை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை கொண்டு காரை திருடியவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், நாங்கள் காரை திருடவில்லை. ரவீந்திரரெட்டி செய்த கொலைக்கு உதவி செய்ததால் அவர் எங்களுக்கு தர வேண்டிய பணத்திற்கு பதிலாக காரை எடுத்து சென்றோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார், ரவீந்திரரெட்டியை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர், தனது மனைவி ஜெயம்மா பணம் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் சாதாரணமாக அடித்தபோது தலையில் அடிபட்டு இறந்து விட்டதாக தெரிவித்தார். ஆனாலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ரவீந்திரரெட்டியும், ஜெயம்மாவும் (26) காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ரவீந்திரரெட்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த ஜெயம்மா தட்டிக் கேட்டார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் ரவீந்திரரெட்டி வீட்டை விட்டு வெளியேறி முதல் மனைவிக்கு தெரியாமல், 2வது திருமணம் செய்து கொண்டு திருப்பதி மாவட்டம் தொண்டவாடா கிராமத்தில் வசித்து வருகிறார். புச்சிநாயுடு கிராமத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இந்நிலையில் கணவர் மாயமானதால் அதிர்ச்சியடைந்த ஜெயம்மா, கணவரை தேடியபோது அவர் திருப்பதியில் இருப்பது தெரியவந்தது. இதனால் கடந்த ஆண்டு மே மாதம் 25ம்தேதி ரவீந்திரரெட்டியை தேடி கோழிப்பண்ணைக்கு வந்தார்.அங்கு தன்னை கைவிட்டுவிட்டு 2வது திருமணம் செய்துகொண்டது குறித்து தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த ரவீந்திரரெட்டி, ஜெயம்மாவை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் கோழிப்பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள் உதவியுடன் ராஜம்பேட்டை பகுதியில் ஜெயம்மா சடலத்தை புதைத்துள்ளார். இதற்கிடையில் கணவரை தேடி திருப்பதிக்கு சென்ற ஜெயம்மா, வீடு திரும்பாததால், அவரது சகோதரர் தேவேந்திரன் அனந்தபுரம் 4வது டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் 3ம்தேதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் ஜெயம்மா குறித்து எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கார் திருட்டு தொடர்பாக ரவீந்திரரெட்டி கொடுத்த புகாரில் விசாரித்தபோது மேற்கண்ட தகவல் தெரியவந்தது. இதனையடுத்து சந்திரகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரரெட்டியை கைது செய்தனர். பின்னர் நேற்று சடலம் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் அடையாளம் கண்டனர். அங்கு, ஜெயம்மாவின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட உள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை, தற்போது கார் திருட்டு வழக்கு விசாரணையில் வெளியே வந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 2வது திருமணத்தை தட்டிக்கேட்ட மனைவி கொன்று புதைப்பு 8 மாதங்களுக்கு பின் கணவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirupati ,Ravindra Reddy ,Ananthapuram district ,Andhra Pradesh ,Thondawada ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி