×

சூடு பிடிக்கும் மக்களவை தேர்தல் : மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக!!

டெல்லி :நேற்று காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், திமுக கட்சி தனது கூட்டணி கட்சிகளோடு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை மேற்கொள்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகி வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதால் அரசியல் களத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே வரும் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 2 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதே 2 தொகுதிகளை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

அதே போல் வரும் 4ம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – மார்க்சிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அந்த 2 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்றது. திமுக உடன் பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் சம்பத் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பத், சண்முகம், குணசேகரன், கனகராஜ் ஆகிய 4 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் கூடுதல் இடங்களை கேட்க மார்க்சிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும் பிப்.4ம் தேதி மாலை மதிமுகவுடன் திமுக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2014 தேர்தலில் மதிமுக தற்போது திருச்சி தொகுதியை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி தொகுதியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தையின் போது, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்பது, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசிக்க உள்ளனர்.

The post சூடு பிடிக்கும் மக்களவை தேர்தல் : மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக!! appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Dhimuka ,CPI ,CBM ,DELHI ,Congress ,CPM ,Dinakaran ,
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...