×

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஆர்கிட் மலர்கள்

 

ஊட்டி, ஜன.29: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஆர்க்கிட் செடிகள் வளர்ப்பகத்தில் ஆர்கிட் மலர்கள் பூத்துக்குலுங்கி கண்கவரும் வகையில் காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான ஆர்கிட் மலர்கள் பூத்து காணப்படுகிறது. ‘ஆர்கிடேசி’ என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த பூக்கும் தாவரங்களான இவை, தாவர குடும்பங்களிலேயே இரண்டாவது மிகப்பெரிய பூக்கும் தாவர குடும்பமாக உள்ளன.  மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வடகிழக்கு இந்திய பகுதிகளிலும் இயற்கையாக காணப்படுகிறது.

அதில், 763 பேரினங்களும், 28 ஆயிரம் சிற்றினங்களும் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மலர்கள் பூத்த பின்னர் பல நாட்கள் வாடாமல் இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் ஆர்க்கிட் வனப்பகுதிகளில் காணப்படுவது மட்டுமின்றி, நாடுகாணி ஜீன்பூல் தாவரவியல் மையம், ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதி, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது மட்டுமின்றி ஆய்வுக்கு வரும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கும் உதவியாக உள்ளது. இதனிடையே ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ஆர்க்கிட் தாவர வளர்ப்பகத்தில் பெலானோப்சிஸ், டென்ட்ரோபியம், சிம்பிடியம், கேட்லியா உள்ளிட்ட ரகங்களில் ஏராளமான ஆர்க்கிட் நாற்றுகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சில ரகங்களில் மலர்கள் பூத்து குலுங்கி காண்போரை கவர்கிறது.

The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஆர்கிட் மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty Government Botanical Garden ,Ooty ,Ooty Botanical Gardens ,Nilgiris district ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...