×

கோடியக்கரை சரணாலயத்துக்கு 10 லட்சம் பறவைகள் வருகை

வேதாரண்யம்: கோடியக்கரை சரணாலயத்திற்கு கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரை சுமார் 10 லட்சம் பறவைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோடியக்கறை வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறியதாவது: கோடியக்கரையில் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை சீசன் காலமாகும். இந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்லும். வழக்கம்போல் இந்தாண்டு லட்சக்கணக்கில் பறவைகள் குவிந்துள்ளது. இதனால் சீசன் உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று 2 வது நாளாக நடந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடியக்கரை சரணாலயத்துக்கு கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரை 10 லட்சம் வெளிநாட்டு பறவைகள் வந்து சென்றுள்ளன. இதற்கு இங்குள்ள சீதோஷ்ண நிலையே காரணம். நேற்று எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பில் தற்போது 1 லட்சம் வெளிநாட்டு பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பூநாரை, செங்கால் நாரை, ஊசிவால் சிரவி உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் வந்துள்ளது. இந்த பறவைகளை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோடியக்கரை சரணாலயத்துக்கு 10 லட்சம் பறவைகள் வருகை appeared first on Dinakaran.

Tags : Kodiakarai ,Kodiakkarai ,Forest Officer ,Abhishek Tomar ,Kodiakkarai Bird Sanctuary ,Kodiakkarai Sanctuary ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில்...