×

ஒரே நாடு, ஒரே சட்டமன்ற தளத்தை நோக்கி செயல்படுவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். இதில் வீடியோகான்பரன்ஸ் மூலமாக பேசிய பிரதமர் மோடி, ‘‘கடந்த 2021ம் ஆண்டு கலந்துரையாடியபோது ஒரே தேசம், ஒரே சட்டமன்ற தளங்கள் பற்றி பேசினேன். இ-விதான் மற்றும் டிஜிட்டல் சன்தாத் தளங்கள் மூலமாக நமது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் இப்போது இலக்கை நோக்கி செயல்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரே நாடு, ஒரே சட்டமன்ற தளம் திட்டம் அனைத்து சட்டமன்றங்களின் செயல்பாடுகளையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் கிடைக்க செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஒரு சட்டமன்றத்தின் பிரதிபலிப்பானது அதன் உறுப்பினர்களின் நடத்தையை பொறுத்தது. சபையில் உள்ள எந்த உறுப்பினர்களும் விதிகளை மீறி செயல்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் சபையின் மூத்த உறுப்பினர்கள் அவருடன் பேசி எதிர்காலத்தில் அவர் அந்த தவறை மீண்டும் செய்யாமல், விதிகளை மீறாத காலம் இருந்தது. ஆனால் தற்போது சில அரசியல் கட்சிகள் அத்தகைய உறுப்பினர்களுக்கு ஆதரவாக நிற்கின்றன. அவர்களின் தவறுகளை பாதுகாக்கின்றன. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் நிலைமை நன்றாக இல்லை. உறுப்பினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பொது வாழ்க்கையில் இருந்து அவர்களை ஒதுக்கி வைப்பதற்கு வழிவகுக்கும். ஆனால் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்களை பொதுமக்கள் புகழ்ந்து பேசுவதை நாம் காண்கிறோம். இது நிர்வாகி, நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும்” என்றார்.

* டிஜிட்டல் புரட்சி

டெல்லியில் நடந்த ஆண்டு என்சிசி பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ‘‘ஒன்றிய அரசானது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. வளர்ந்த இந்தியாவானது அவர்களின் கனவுகளை நிறைவேற்றும். நீங்கள் ஒரு வளர்ந்த இந்தியாவின் சிற்பி. முன்பெல்லாம் பெண்கள் கலாச்சார நிகழ்ச்சிகளோடு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தனர். ஆனால் ஒன்றிய அரசானது அவர்களுக்கு முப்படை உட்பட பல்வேறு துறைகளில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. அவர்கள் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ளனர். இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. டிஜிட்டல் புரட்சி நடந்து வருகின்றது. இது இளைஞர்களின் படைப்பாற்றலுக்கு மிகவும் பயனளிக்கிறது. புறக்கணிக்கப்பட்ட எல்லை கிராமங்கள் நாட்டின் முதல் கிராமங்களாக மாறியுள்ளன”என்றார்.

The post ஒரே நாடு, ஒரே சட்டமன்ற தளத்தை நோக்கி செயல்படுவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Mumbai ,Mumbai, Maharashtra ,Tamil Nadu ,Speaker ,Appavu ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…