×

தமிழ்நாட்டிற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மு.க.ஸ்டாலின் 8 நாள் வெளிநாடு பயணம்: ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா சென்று தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்

சென்னை: தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக 8 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றார். ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு சென்று தொழில் அதிபர்களை சந்தித்து, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என எடுத்துரைக்க இருப்பதாகவும், ரோகா மற்றும் கெஸ்டாம்ப், உட்பட சில பெரும் தொழில் நிறுவனங்களுடனும், ‘இன்வெஸ்ட் ஸ்பெயின்’ எனும் முதலீட்டு அமைப்புடனும் நேரடி பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ள இருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து, அந்த நாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடியும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தின் பொருளாதாரம் 2030க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சியடைவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு லட்சிய இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன்படி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாநிலத்தின் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும், வலுவான தொழில் சூழலை உருவாக்கவும், மனித வளத்தை பெருக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த மாநாடு மூலம் முன் எப்போதும் இல்லாத அளவில் ரூ.6,64,180 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

அதனால் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உட்பட 26,90,657 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த முதலீடுகள் பல்வேறு துறைகளில் இருந்து வரப்பெற்றுள்ளன. இந்த மாநாடு நிறைவடைந்தபோது, தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதியில் வெளிநாடுகளுக்கு செல்வார் என்று தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார். அங்கிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளார். முன்னதாக சென்னை விமானநிலையத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: திராவிட மாடல் அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024ம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பயண நாட்கள் தவிர்த்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன்.

என்னுடைய கடந்த கால வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை, 2022ம் ஆண்டு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.6 ஆயிரத்து 100 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதேபோல, 2023 மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 1,342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த இரண்டு பயணங்கள் மூலமாக, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரூ.7,442 கோடி முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல் வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவத் தொடங்கியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓம்ரான் மற்றும் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை நிறுவ தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட இரண்டே மாதங்களில், ஓம்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிடாலேண்டு நிறுவனத்தின் ஐ.டி. பூங்காவை சமீபத்தில் தொடங்கி வைத்தேன். ஐக்கிய அரபு நாடுகளில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், லூலூ பன்னாட்டுக் குழுமம், கோயம்புத்தூரில் தன்னுடைய திட்டத்தை துவங்கியிருக்கிறது. ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்றே, ஸ்பெயின் நாட்டிலும், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறேன். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில் முனைவோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என்று, அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன். இந்த பயணத்தின் போது, ரோகா மற்றும் கெஸ்டாம்ப், உட்பட சில பெரும் தொழில் நிறுவனங்களுடனும், ‘இன்வெஸ்ட் ஸ்பெயின்’ எனும் முதலீட்டு அமைப்புடனும் நேரடி பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்த பயணத்தின் மூலமாக, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து, அந்த நாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன். எனவே, உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு இந்த பயணம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். உங்கள் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். பெரிய நிறுவனம் ஏதாவது வர வாய்ப்பு இருக்கிறதா. எவ்வளவு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது? முதல்வர் பதில்: நான் பயணம் முடித்துவிட்டு வந்த பிறகு விளக்கமாக சொல்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த நாடுகளிலும், தொழிலதிபர்கள், அரசு பிரதிநிதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, வெளிநாடு தொழிலதிபர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பார். இந்த பயணத்தின்போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் முதல்வரின் செயலாளர் உமாநாத், தொழில்துறை ஆணையர் விஷ்ணு, உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடன் சென்றனர்.

The post தமிழ்நாட்டிற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மு.க.ஸ்டாலின் 8 நாள் வெளிநாடு பயணம்: ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா சென்று தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,M.G.Stalin ,Spain, ,Australia, ,USA ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Spain ,America ,India ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...