×

தமிழ்நாட்டில் கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு நடத்திய வனத்துறை குழு தகவல் தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் நடந்த தமிழ்நாடு வனத்துறையின் இரண்டாவது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அறிய முடிகிறது.கடந்தாண்டு பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட முதல் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு மூலம் கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 246 என மதிப்பிடப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை ஒட்டிய நில பரப்புகளான சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேரளாவின் வயநாடு, பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடகாவின் நாகர்ஹோல் புலிகள் காப்பகம் ஆகியவை வரலாற்று ரீதியாக கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்படுகிறது. கழுகுகளின் 2வது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு கடந்த டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த முறை பில்லிகிரி ரங்கநாத சுவாமி கோவில் புலிகள் காப்பகம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பில் இடம்பெற்றது. வான்டேஜ் பாயின்ட் எண்ணிக்கை முறை பின்பற்றப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 139 வான்டேஜ் பாயின்ட்களில் 4 அமர்வுகளாக இரண்டு நாட்களில் 8 மணிநேரம், அனைத்து 139 வான்டேஜ் புள்ளிகளிலும் நடத்தப்பட்டது. கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 320 என மதிப்பிடப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து பாதுகாப்பதற்காக முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தலைமை வனஉயிரினக் காப்பாளர் தலைமையில் மாநில அளவிலான கழுகுகள் பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளது. மேலும், கழுகுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கால்நடை சிகிச்சைக்காக விற்கப்படும் டிக்ளோஃபெனாக் மருந்து விற்பனைக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மூலம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலமுறை மருந்து கட்டுப்பாட்டு துறையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மருந்தை விற்பனை செய்ததற்கு 104 உற்பத்தியாளர்கள், மல்டி டோஸ் டிக்ளோஃபெனாக் விற்பனையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருந்தகங்களில் வழக்கமான ஆய்வு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணிபுரியும் மருந்தாளுனர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம். கழுகுகள் உணவு தேடும் பகுதிகளில் நீர் துளைகளை உருவாக்குதல். மரபியல், அதன் கூடு கட்டுதல், உணவு தேடுதல் மற்றும் கால்நடை மருத்துவ பயன்பாட்டிற்கு பாதுகாப்பான மருந்துகள் கிடைப்பது போன்ற கழுகு பற்றிய ஆராய்ச்சியை ஊக்குவித்தல். கழுகுகளுக்கு உணவு ஆதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் இதுவரை இருந்து வந்த வனவிலங்கு சடலங்களை புதைக்கும் நடைமுறையை மாற்றி, பிரேத பரிசோதனைக்குப் பின் அந்த சடலங்கள் வெட்ட வெளியில் இடப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து சூழல் சமநிலையை எய்த இயலும். கடந்த 2023 டிசம்பர் மாதம் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு குழுவில், னிவாஸ் ஆர்.ரெட்டி, தலைமை வனஉயிரினக் காப்பாளர் அருண்குமார், துணை இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம் ஆகியோரை இருந்து கணக்கெடுப்பை முன்நின்று நடத்தினர்.
மேலும், இந்த கணக்கெடுப்பு குழுவில் மாநில வனஉயிரின வாரிய உறுப்பினர்கள், மாநில அளவிலான கழுகு பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், என்ஜிஓக்கள், பறவை நிபுணர்கள், கழுகுகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுதந்திரமான பறவை ஆர்வலர்கள் இடம்பெற்று இருந்தனர்.

The post தமிழ்நாட்டில் கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Forest department ,CHENNAI ,Tamil Nadu Forest Department ,Kerala ,Karnataka ,
× RELATED சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட...